Ticker

6/recent/ticker-posts

யூ.ஆர்.அனந்தமூர்த்தி - U. R. Ananthamurthy

பிரபல கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி [U. R. Ananthamurthy] உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 82 வயதான அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலமானார்.

அனந்தமூர்த்தி இந்திய எழுத்துலகில் ஒரு தனி இயக்கமாகவே இயங்கியவர். ஆங்கிலத்துறை பேராசிரியராக பணியாற்றிய அவர், அன்னை மொழியான கன்னடத்தில் அற்புதமான படைப்புகளை தந்தவர்.
 எழுத்தாளர் என்பதோடு நில்லாமல் திரைக்கதை ஆசிரியர்,விமர்சகர்,வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டிருந்த அவர் அடிப்படையில் சமஸ்கிருத பள்ளியில் தன்னுடைய கல்வியை துவங்கியவர்.

அவரின் எழுத்துக்கள் மரபான சங்கதிகளை முழுவதுமாக எதிர்க்கிற போக்கை செய்யாமல் அவற்றைப் பற்றிய தெளிவான புரிதலோடு அணுகின. மரபை ஒட்டி நடக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சமூகத்தில் நிலவும் போலித்தனங்களை அங்கதத்தோடு அவரின் கதைகள் சாடின.

 'சம்ஸ்க்ரா' நாவலில் வைதீகத்தை தீவிரமாக கைக்கொண்டு இருக்கும் நாயகனுக்கும், அதை முற்றும் எதிர்த்து குரல் கொடுக்கும் நாரணப்பாவுக்கும்  நடக்கும் போராட்டம், எங்கெங்கும் நடப்பது. 
எப்படி சமத்துவமின்மையை மரபு என்கிற பெயரில் தூக்கிப்பிடிக்கிறோம் என்கிற உண்மையும்,இயல்பான உணர்வுகளை ஒழுக்கம் என்கிற போர்வையில் அடக்கி வைக்கிறோம் என்கிற உண்மையும் முகத்தில் அறைகிற பொழுது, ஒளிந்து கொள்ளாமல் அவற்றை எதிர்கொள்ள திரும்பி வரும் அந்த பாத்திரப் படைப்பு, காலங்களை கடந்து நிற்கும். அதே கதை திரைப்படமாக வந்து தேசிய விருது பெற்றது.

குடும்பங்களில் பெரிதாக குரல் எழுப்பாமல் அமைதியாக இயங்கி வருவதாக கருதப்படும் பெண்களுக்குள் இருக்கும் ஆவேசம் மற்றும் கோபங்களை அவரின் பிறப்பு நாவல் காட்சிப்படுத்தியது. 

'வெட்டுக்கிளி' நாவலில் பொருள் தேடி உழைக்கவோ,வாழ்க்கையின் வேகங்களுக்கு ஈடு கொடுக்கும் விருப்பமோ இல்லாத நாயகன் வெங்கடா, சின்னச்சின்ன அற்புதங்களில் அளவில்லாத மகிழ்ச்சி கொள்கிறான். அவன் மனைவி,பிள்ளை என்று எல்லாரும் அவனை கரித்துக்கொட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் ,"நீயெல்லாம் ஒரு தந்தையா ?" என்று மகன் ஆவேசப்பட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். அப்பொழுது வெங்கடா வீட்டின் முற்றத்தில் சூரிய ஒளியில் நிம்மதியாக இருக்கும் வெட்டுக்கிளியை கண்டு மனங்குளிர்கிறான்.

வேதகாலத்தில் பிராமணர்கள் மாமிசம் உண்டார்கள் என்கிற உண்மையை மறைத்து பைரப்பா எழுதிய பொழுது, அதை எதிர்த்து இவர் குரல் கொடுத்தார். அதற்கு கடுமையான விமர்சனங்கள் வலதுசாரிகளிடம் இருந்து வந்ததும், இனிமேல் இலக்கிய விமர்சனமே செய்யப்போவதில்லை என்று அவர் அறிவித்தார். 

தமிழ் மொழியை தன் மாநில பள்ளிகளை விட்டு கர்நாடக அரசு வெளியேற்றிய பொழுது அதற்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்தார்.

வலிமையான அரசே தேவை என்று இந்துத்வவாதிகள் சொல்லி வருவதை சார்ந்து, கூர்மையான பார்வையோடு ஹிந்துத்வா மற்றும் சுயராஜ்யம் என்றொரு நூலை அவர் எழுதிக்கொண்டு இருந்தார். 

புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலில் அவரின் பெயர் இடம்பெற்ற பொழுது அவர் இரண்டு கிட்னியும் செயலிழந்து டயாலிசிஸ் மூலமே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருந்தார். இருந்தாலும் ஓயாமல் உழைத்துக்கொண்டே இருந்தார். 

லண்டனுக்கு உரையாற்ற சென்ற பொழுது இப்படி அவர் சொன்னார் ,"இந்தியாவில் அன்னை மொழியில் எழுதும் அற்புதமான எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சார்பாக உங்கள் முன்னர் நிற்கிறேன் !". பாசிசத்தின் காலத்தில் எப்படி புனைவிலக்கியம் எழுந்தது என்பதில் முனைவர் பட்ட ஆய்வு செய்த அவர் ஓயாமல் அதிகாரத்துக்கு எதிராக குரல் எழுப்பினார்.

"தமிழ் என்றால் அழகு என்று அர்த்தம். என்  ஒரிய சமையல்காரர் இந்தியோ,கன்னடமோ எந்த மொழியில் பேசினாலும் அதற்கு ஏற்ப மாற்றிக்கொண்டு ஐரோப்பியன் போல பேசுவார். தமிழ் அப்படிப்பட்ட மாற்றங்களுக்கு தன்னை பெரும்பாலும்  உட்படுத்திக்கொள்வதில்லை. அது தனித்து இருக்கிறது. அதன் இந்த இறுக்கமான தன்மையே அதன் தனித்த பண்பு. 
தமிழர்கள் எங்கிருந்தாலும் தங்களை தமிழன் என்று அடையாளப்படுத்திக்கொள்வதில் பெருமை கொள்வார்கள். அவர்களின் கலாச்சார வேர்கள் வலிமையானவை. எந்த நாட்டின் கடந்த காலத்தை விட உயிரோட்டம் மிகுந்ததாகவும்,நினைத்து இன்புறும் வகையிலும் அமைந்திருக்கிறது. அவர்கள் மொழியின் கவிதைகளில் இருக்கும் உணர்வுகள் பல்வேறு சங்கதிகள் பிரமிக்க வைப்பவை." என்று அவர் திறந்த மனதோடு பதிவு செய்தார். 

முதலாளித்துவம்,பணம்,வளர்ச்சி என்று கவனம் கொண்டிருக்கும் நாம் விளிம்புநிலை மக்களில் இருந்து எழும் அற்புதமான எழுத்துக்களை கவனிப்பதில்லை என்று ஆதங்கத்தோடு இருந்தார். ஞானபீட விருது பெற்ற அவரின் அதிர்வுகள் நெடுங்காலத்துக்கு நீடித்து நிற்கும்.

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, ‘மோடி பிரதமர் ஆகி விட்டால், நான் இந்தியாவிலேயே வாழ மாட்டேன். வேறு ஏதாவது நாட்டுக்கு சென்று குடியேறி விடுவேன்’ என்று அனந்தமூர்த்தி பகிரங்கமாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

அனந்தமூர்த்தியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ள அதே வேளையில், அவரது மரண செய்தியை அறிந்ததும், மங்களூரில் உள்ள பஜ்ரங் தள் கட்சி தலைவர் அலுவலகத்தின் வாசலில் கூடிய சிலர் பட்டாசுகளை வெடித்து, அனந்தமூர்த்திக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

அனந்தமூர்த்தியின் மரண செய்தியை அறிந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாடியவர்கள் மனிதர்களாக இருக்க தகுதியற்றவர்கள்.

நன்றி : அனந்த விகடன்  - பூ.கொ.சரவணன்


Post a Comment

1 Comments

  1. யூ.ஆர்.அனந்தமூர்த்தி அவர்கள் கன்னட மொழியின் சிறந்த எழுத்தாளர். அவரின் பாரதிபுர நாவல் எனக்கு மிகவு பிடித்த நாவல். அவரின் மறைவு கன்னட இலக்கிய உலகில் நிரப்ப முடியாத வேற்றுடத்தை உருவாக்கி உள்ளது

    ReplyDelete

Comment is awaiting for approval