Ticker

6/recent/ticker-posts

ஜே.ஆர்.டி.டாடா பிறந்த தினம் - ஆனந்த விகடன்

தொழிற்துறை ஜாம்பவான் ஜே.ஆர்.டி.டாடா பிறந்த தினம் இன்று

ஒரு மனிதனின் கனவுகள் ஒரு தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஜே.ஆர்.டி.டாடா.

இந்திய தந்தைக்கும் ,பிரெஞ்சு தாய்க்கும் பிறந்த அவர் பிரான்ஸ் ராணுவத்தில் இணைந்து பணியாற்றவும் செய்தார். அங்கிருக்கிற பொழுது எண்ணற்ற சாகசங்களில் விருப்பம் கொண்டவராகவும் இருந்தார். எனினும்,அவரின் தந்தை ,"போதும் நீ அங்கிருந்து வா !" என்று அழைத்துக்கொண்டார். அப்படி அவர் அழைத்ததால் தான் ஜே.ஆர்.டி நமக்கு கிடைத்தார். 

அதற்கு பின் அவர் சார்ந்திருந்த படைப்பிரிவு மொராக்கோவில் நடந்த போரில்
முழுமையாக அழிக்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜில் பொறியியல் படிக்கலாம் என்று மீண்டும் ஆர்வம் மேலிட போனார் ; மீண்டும் அப்பா டாடா நிறுவனத்தில் வேலைக்கு சேர அழைத்துக்கொண்டார். பல்கலையில் படிக்கவில்லை என்கிற வருத்தம் இறுதிவரை ஜே.ஆர்,டி. டாட்டாவுக்கு இருக்கவே செய்தது.

இளம் வயதில் பிரான்ஸ் தேசத்தில் இருந்த பொழுது விண்ணில் விமானத்தில் பறப்பதன் மீது காதல் கொண்டார். அவர் இந்தியாவின் முதல் விமானி ஆனார்.

டாடா நிறுவனத்தில் தலைமைப்பொறுப்புக்கு வந்த பின்னர் அவர் உருவாக்கிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் தான் இந்தியாவின் ஏர் இந்தியாவாக உருவெடுத்தது.

தொழிலாளிகள் வீட்டை விட்டுக்கிளம்பும் பொழுதில் இருந்து அவர்கள் மீண்டும் வீடு போய் சேரும் வரும்வரை பணியில் இருப்பதாகவே கருதப்படுவார்கள் என்கிற நடைமுறையை கொண்டு வந்த பல தொழிலாளர்களின் வாழ்வில் ஸ்திரத்தன்மையை உண்டு செய்தவர்.

இன்றைக்கு கலக்கும் டி.சி.எஸ்.டைட்டன் ,டாடா மோட்டார்ஸ் எல்லாமும் இவரின் கனவுக்குழந்தைகளே. இன்றைய இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி டாடாவில் தான் வேலை பார்த்தார்.
அவர் டாட்டாவை விட்டுக்கிளம்பும் பொழுது ஜே.ஆர்.டி. அவரை அழைத்தார் ,"சுதா !சமூகம் நமக்கு எவ்வளவோ தந்திருக்கிறது. அதனால் நாம் பலனடைந்து இருக்கிறோம் அதை நாம் கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும். " என்றார் அதன் தாக்கத்தில் தான் இன்போசிஸ் அறக்கட்டளை எழுந்தது.

தன்னுடைய பெயரில் ஒரு சொத்தைக்கொண்டு இறுதிவரை அவர் கொண்டிருக்கவில்லை. வீட்டைக்கூட தன்னுடைய பெயரில் பதிவு செய்து கொள்ளாத எளிமை அவரிடம் இருந்தது.

இந்திய அரசு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அதை தீவிரமாக முன்னெடுத்து நடத்தினார் அவர். பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் சொன்ன வரிகள் தான் அவரின் சிந்தனை பாய்ந்த விண்ணை போல போல நம் தேசத்தின் எல்லாரின் சிந்தையிலும் வியாபித்து இருக்கவேண்டும்.

- அந்த வரிகள்

இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக வேண்டாம் ;இந்த நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்வோடு, தன்னிறைவோடு வாழ்கிற தேசமாக இந்த பூமி ஆனால் போதும் !”என்ற அவரின் பிறந்தநாள் ஜூலை 29

- பூ.கொ.சரவணன்

                                                                                 நன்றி : ஆனந்த விகடன்

Post a Comment

0 Comments