Ticker

6/recent/ticker-posts

இயக்குனர் ஆர்.சி சக்தி காலமானார்

பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி சக்தி [ஆர்.சி.சக்திவேல்]  சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது  76.

கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்திருந்தவர் திடீரென மாத்திரையை எடுத்துக் கொண்ட போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால், நேற்று சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை  பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர். மறைந்த ஆர்.சி. சக்திக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 


 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள புழுதிக்குளத்தில் பிறந்தவர் ஆர்.சி.சக்தி [R.C Sakthi]. சிறுவயதிலேயே படிப்பில் ஆர்வம் இல்லாமல் நாடகத்தில் கவனம் செலுத்தினார். நண்பர்களுடன் இணைந்து நாடகக் குழுவினை ஆரம்பித்து நடிக்கவும் செய்தார். கிராம மக்கள் அனைவரும் பாரட்டியதோடு இல்லாமல், சினிமாவில் அடியெடுத்து வைக்கவும் உதவினர். 

சென்னை வந்த சக்தி, வில்லுப்பாட்டு புகழ் சுப்பு ஆறுமுகம் குழுவில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார். அடுத்து பொற்சிலை, அன்னை வேளாங்கண்ணி போன்ற படங்களில் திரைக்கதை எழுதினார்

'உணர்ச்சிகள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இதில் கமல்ஹாசன் நாயகனாக நடித்தார்.

தர்மயுத்தம், மனிதரில் இத்தனை நிறங்களா?, பத்தினிப்பெண், தாலி தானம்,  ஸ்பரிசம், சிறை, வரம், உண்மைகள், கூட்டுப்புழுக்கள், மனக்கணக்கு  உள்பட பல படங்களை இயக்கியவர் ஆர்.சி.சக்தி. 1980 களில் லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'சிறை' படம் ஆர்.சி. சக்திக்கு பெரும் புகழை பெற்று தந்தது. அனுராதா ரமணன் எழுதிய கதையை தழுவி இப்படத்தை அவர் இயக்கி இருந்தார்.
 
கமல் ஹாசனின் நெருங்கிய நண்பரான ஆர்.சி. சக்தி யை  கமல் சக்தி அன்ன என்றே குருபிட்டு வந்தார். தம் குடும்பத்தில் ஒருவராகவே கமல், ஆர்.சி. சக்தி யை பாவித்தார். கடந்தாண்டு ஆர்.சி.சக்தி, தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments