ஜனவரி 8: ஸ்டீபன் ஹாகிங் [Stephen Hawking] எனும் நம்பிக்கை நாயகன் பிறந்த தினம்இன்று.
ஸ்டீபன் ஹாகிங் 1942 ஜனவரி 8 ம் தேதி , இங்கிலாந்தின், ஆக்ஸ்போர்டில் பிறந்தார். தந்தை பிரான்க் ஹாகிங் , அன்னை இசொபெல் ஹாகிங்.
பள்ளியில்
சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள்,கடிகார
பாகங்கள் அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார்.
அப்பா மருத்துவம் படிக்க சொல்ல இவர் இயற்பியலை ஆக்ஸ்போர்டில் படித்தார்.
வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன. மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம்
மணிநேரம் தான் படித்திருப்பார். முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால்
காஸ்மாலஜி துறையில் மேற்படிப்பை படிக்க இயலாது, எனினும் தன் திறனை
கல்லூரியின் நேர்முகத்தில் காட்டி கேம்ப்ரிட்ஜில் சேர்ந்தார் .
எதோ தடுமாற்றம் உண்டானது, மாடிப்படியில்
நடக்கும் பொழுது தடுமாறினார், மங்கலாக உணர ஆரம்பித்தார் .பேச்சு குழற
ஆரம்பித்தது ;செயல்பாடுகள் முடங்கின. மோட்டார் நியூரான் நோய் என
அழைக்கப்பட்ட அரிய நோய் தாக்கி இருந்தது. இரண்டு வருடம் வாழ்ந்தால் கடினம்
என்றார்கள். முதலில் நொறுங்கிப்போனவர் பின் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு
பணிகளை தொடர்ந்தார்.
காலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரின் முனைவர் கட்டுரை
ஆடம்ஸ் பரிசை பெற்றது. இந்த காலத்தில் கரங்கள் செயலற்று போயின ; சுத்தமாக
பேச முடியாத நிலை உண்டானது. எனினும் பேச்சு உருவாக்கும் கருவி மூலம் பேசி
வருகிறார்.
1979 இல் கேம்ப்ரிட்ஜில் நியூட்டன் உட்பட பதினான்கு
பேர் மட்டுமே வகித்த லுகாஸியன் கணித பேராசிரியர் ஆனார். கருந்துளைகளில்
இருந்து வெளிவரும் கதிர்வீச்சை பற்றிய அவரது அறிவிப்பு ஹாகிங் கதிர்வீச்சு
என அழைக்கபடுகிறது . காஸ்மாலஜி துறையை சார்பியல் மற்றும் குவாண்டம்
இயற்பியல் எனும் இரண்டு பிரிவுகளின் ஊடாக கண்ட முதல் அறிஞர் இவரே. இவரின்
"A Brief History of Time" நூல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .
ஐன்ஸ்டீனுக்கு பின் உலகின் தலைசிறந்த கோட்பாட்டு
இயற்பியலாளர் இவர். சோதனைகளை கடந்து சாதிக்க தூண்டும் அவரிடம் ,"உங்களுக்கு
வாழ்க்கை வெறுப்பாக இல்லையா ? எப்படி இத்தனை துன்பங்களுக்கு நடுவிலும்
தீவிரமாக உங்களால் செயலாற்ற முடிகிறது ?" என்று கேட்கப்பட்டது ,"என்னுடைய
இருபத்தி ஒரு வயதிலேயே என்னுடைய எதிர்பார்ப்புகள் மருத்துவர்களால் பூஜ்யமாக
ஆக்கப்பட்டுவிட்டது. அதற்கு மேல் நான் பெற்றது எல்லாமே போனஸ் தான். எதை
இழந்தோம் என்பது அல்ல விஷயம் ? எது மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம் !
வாழ்க்கை சுகமானது !" என்றார்.
-பூ.கொ.சரவணன்
நன்றி : ஆனந்த விகடன்
0 Comments
Comment is awaiting for approval